தமிழ்ச்செய்யுளில் து என்ற உருபைப் புரிந்துகொள்ள

இங்கே தமிழ்ச்செய்யுள்களில் அடிக்க்டி வழங்கும் து என்ற விகுதிபற்றிய விளக்கம் சொல்லுகிறேன். இதை அறிந்தால் செய்யுள்களை எளீதில் பழக வாய்க்கும்.
  • து என்ற உருபுச்சொல் அதற்கு முன் ஒரு பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து நின்று சேர்க்கை, உடையது, சேர்ந்தது, உள்ளது என்ற பொருளில் வழங்கும்.
    1. “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பதில் முதற்று என்பது முதல் + து: முதல் உடையது. ஆகவே “உலகு ஆதிபகவனை முதலாக (தலைமையாக) உடையதே” என்று பொருள்.
    2. முந்நூறு ஊர்த்து” என்பதில் “முந்நூறு ஊருடையது” என்றுபொருள்.
    3. அது தன்னைச்சேர்த்து வரும் சொல்லில் இறுதிஓசையைப் பொறுத்துப் புணர்ச்சியினால் டகரம், (ள் + து, ண் + து)  றகரமாகவும் (ல் + து, ன் + து) ஒலிக்கும்.பொருட்டு, கட்டு, பாற்று என்று ஒலிக்கும்.
    4. இன்றும் அது பலசொற்களில் புதைந்து வழங்குகிறது. பொருட்டு என்பதில் “பொருள் + து” என்பது அமைப்பு. “இது ஒரு பொருட்டு இல்லை” என்றால் “இது ஒரு பெரிய பொருள் உடையது இல்லை” என்று பொருள்.
    5. புறப்பாட்டு 32 “அவன் நாடு … கொண்ட குடுமித்து” என்ற சொல்லை வழங்குகிறது. அங்கே “குடுமி உடையது” அதாவது “நினைத்த முடிவை உடையது” என்ற பொருளில் வழங்குகிறது.
    6. புறப்பாட்டு 33 (கானுறை வாழ்க்கை)இல் “செம்மற்று அம்ம நின் வெம்முனை இருக்கை” என்பதில் செம்மற்று என்ற சொல்லைச் செம் (=செம்மை)+ அற்று (=அத்தன்மைத்து) என்று சிலரால் சொல்லியுள்ளது. ஆனால் அங்கே செம்மல் + து என்பதுதான் பொருந்தும். “நின் வெம்முனை வாழ்க்கை செம்மல் உடையது ” என்று அங்கே பொருளாகும்.
    7. திருக்குறளில் “தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை” என்பதில் “தன் கையில் உள்ளதாக ஒன்று இருக்கச் செய்பவன் வினை”
    8. திருக்குறளின் காமத்துப்பாலில் “பெண்தகையாள் பேரமர்க் கட்டு” என்பதில் “கண் + து” = கட்டு எனவாகும். கண்ணில் உள்ளது, கண்ணோடு சேர்ந்தது எனப்பொருள்.
    9. “தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று” என்பதில் “பாற்று = பால் + து’ என்று பகுக்கும். அங்கே அதன்பொருள்: பால் அதாவது தொகுப்பைச் சேர்ந்தது என்பதாகும்.  அதாவது “[மழை] அமிழ்தம் என்று உணர வேண்டிய தொகுப்பைச் சேர்ந்தது” என்று .
    10. பல பழஞ்செய்யுள்களில் “நீர்த்து” = “நீர்மை உடையது” (நீர் = குணம் என்று பொருள்) என்பது வாடிக்கையாகும். புறநானூறு ஒன்றில் சோழன் தாமப்பல்கண்ணனாரைத் தப்பாகப் பேசியதற்கு “நீர்த்தோ நினக்கென வெறுப்பக்கூறி”  என்று பாடுவார். அதற்கு “நல்ல குணமுடையதோ நினக்கு என வெறுப்பச் சொல்லி” எனப் பொருள்.
  • எனவே இந்த அமைப்பைப் புரிந்து கொண்டால் பழஞ்செய்யுட்களை விளங்கிப் பயிலலாம்.

    பெரி. சந்திரசேகரன்.