Participate: பங்கேற்பா? கலந்துகொள்வதா?

“… இலக்கியக் கூட்டத்தில் உங்களின் பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். ”
என்பதில் பங்கேற்பு என்று சொல்வதுஆங்கிலச்சொல்லை மொழிபெயர்ப்பதால் விளைந்தது.
திராவிடமொழிகளில் கலத்தல், சேர்தல் என்ற பொருளில் சொற்களை வழங்குவதுதான் தகும்.

முன்பெல்லாம்: “நீங்கள் கட்டாயம் இந்த விழாவில் கலந்து கொள்ளவேண்டும்“, “அவர் கூட்டத்தில் கலந்துகொண்டாரா”  என்றெல்லாம் பேசியது நமக்கு நினைப்பிருக்கும்.  நான் கேட்டு வளர்ந்த கொங்கு வழக்கில் பங்கேற்பு என்ற சொல்லைக் கேட்டதில்லை! பங்கேற்பு என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கே புதிதாக இருந்தது. அது ஒட்டவேஇல்லை.

சான்றாக: மன்னாதிமன்னன் என்ற படத்தில் கீழ்க்கண்ட இரண்டாம்  பாகத்தின் கட்டங்கடைசியில் (நேரம் 1:07:40) காவிரிவிழாவில் “கலந்துகொள்” என்று பலமுறை வெவ்வேறு ஆட்கள் பேசுவதைக் கவனிக்கவும்.
http://www.tamilpeek.com/watch.php?vid=624∂=3227

பங்கேற்பு என்ற சொல் தமிழில் இயற்கையாக வழங்கும் சொற்களை ஆங்கிலச்சொல்லைக் கேட்டவுடன் இணைக்க மறந்த எழுத்தாளர்களால் நேர்ந்ததாகும். இதுபோல் பல சொற்களும் சொல்வழக்கக் கோட்பாடுகளும் ஆங்கிலநெறியைத் தழுவியதால் ஏற்பட்டுள்ளன. அவற்றை இங்கே என்னுடைய மற்ற கட்டுரைகளில் காண்க.

Participate என்பதற்கு மற்ற திராவிடமொழிகளில் கூடக் கலத்தல், இணைதல் ஆகிய கருத்துகளில் சொற்கள் வழங்குவதற்குச் சான்றுகள் காணலாம்:

தெலுங்கில்கூட:  (http://dsal. uchicago. edu/cgi-bin/ romadict. pl?query= participate&table=brown )
எனயு ( < *எணையு = இணையு) என்ற சொல் வழங்குவதைக் காணலாம்:
enayu. [Tel.] v. n. & a. To seem, to resemble. To mingle. coalesce, unite. To accord. To associate, To participate in, enjoy, or suffer (as death.)

ஆங்கிலத்திலும் அந்தச் சொல்லுக்கு “to join in” என்ற பொருள் இருப்பதை http://en.wiktionary.org/wiki/participate என்ற கட்டுரையிற் காணலாம். எனவே ஆங்கிலத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஒரே சொல் வழங்குவதை உணராமல் நாம் அந்த ஒரு சொல்லின் நேரடிப்பொருளைமட்டுமே மொழிபெயர்க்கக்கூடாது.

கலிபோரினியாத் திரு.மு.மணிவண்ணன் தெரிவித்தது: பன்மொழிப்புலவர் கா அப்பாத்துரையார் தொகுத்த கழக ஆங்கிலத் தமிழ் அகராதியிலிருந்து (பேரா. அ. கி. மூர்த்தி திருத்திய பதிப்பு, 2002):

Participate (v): கலந்து கொள்

Participant (n): கலந்து கொள்பவர்

Participation (n): கலந்து கொள்ளல்

ஆக்ஸ்போர்டு ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதியிலிருந்து ( பேரா. முருகன், பேரா. ஜெயதேவன் 2009):

Participate (v): to take part or become involved in, ஒன்றில் பங்கு கொள், இணைவுறு, கலந்து கொள்

என்று மற்றவர்களும் கலந்துகொள் என்று சொல்லியிருப்பது யான் சொல்வதைத் திண்ணப்படுத்துகிறது.

எனவே நாம் கவனத்தோடு சிறிது சிந்தித்துப் பார்த்துச் சொற்களை வழங்குவது சிறக்கும்.

பங்கேற்பு என்பது மொழிச்சிதைவு என்ற நோக்கில் பிழையில்லை; செந்தமிழ்மொழிதான்.
ஆனால் மொழியின் சொல்வழக்கு மரபையும் சொற்பிறப்புக்கு அடிப்படையான பொருள்மரபையும் குலைக்கும் என்ற நோக்கில் அது சிறப்பில்லை. தமிழ்மொழி இப்பொழுதுள்ள தறுவாயில் இந்த மரபைக் குலைத்தால் மீளமுடியாத பெரியமாற்றம் நேரும் என்பதை நாம் கருதுவோமாக.

இந்த விழிப்புணர்வு இல்லையென்றால்:

  1. நம்மொழியின் சொற்கள் வழக்கொழிந்து தொலையும்.
  2. பல கருத்துகளுக்கு (இங்கே ஆங்கிலத்தில் participate என்ற கருத்திற்கு) அடிப்படைப் பொருள் என்னவென்றே தெரியாமல் போகும். இது அடிப்படைக் கெடுதல் செய்யும்.
  3. அதன் விளைவாகத் தமிழ்மொழியின் தொடர்ச்சி தொலையும். புதுத்தலைமுறையாக ஒரு மொழி பெருகிப் “பழைய” மொழியின் சொற்களுக்குப் பொருள் விளங்காமல் போகும் பெருத்தகேடு உள்ளது.சங்க இலக்கியத்திற்கும் மற்றவற்றிற்கும் இது ஒரு பெரிய வேறுபாடாகும். (ஆடு = வெற்றி, நகர் = வீடு, கோயில் போன்றவை எடுத்துக்காட்டுகள்)
  4. தமிழ்மொழியில் புதுச்சொற்கள் வழங்க அடிப்படைக் கருவூலம் என்பதுவும் ஊற்று என்பதுவும் தொலையும்.
  5. ஆங்கிலேயர் சிந்தனையை மொழிபெயர்ப்பதாகத்தான் இருக்கும். தமக்கே உரிய நினைப்பு என்பது இல்லாமல் போகும்.

“எனவே சென்ற இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்….இன்னின்னார்…” என்று சொல்க!