திருவள்ளுவர் சமணமதத்தார் என்பதனால் ஏன் நமக்குக் குறை வேண்டும்?
அந்தமதத்திற்கே உரிய ஆனால் எல்லாருக்கும் பொதுவாகப் பொருந்தாத கொள்கையை வற்புறுத்துவதைத்தான் குறையாக நினைக்கவேண்டும்.
கொல்லாமை புலாலுண்ணாமை இயன்றளவு நல்லதென்று தெரிந்ததே.
அதேபோல் இன்றும் நாம் மேலைநாட்டில் விளைந்த தனியுரிமை விடுதலை, அறிவியல், அறிவியல்நோக்கில் மொழியியல் பண்பாட்டு மரபாராய்ச்சி போன்ற மதங்களை ஏற்றுப் பயன்பெறுகிறோம். எனவே நம்முள் ஒருவர் நல்லது சொல்லும்பொழுது ஓ இவர் மேலை மரபினர் என்று எண்ணி வருந்தினால் சிறக்குமா?
மேலும் தமிழர்கள் ஏதோ இன்று இருப்பதுபோல் பண்டைநாளில் மதங்கள் இருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் ஈராயிரம் ஆண்டுகள் முன்பு வெவ்வேறு கொள்கைகள் இருந்தன. பலர் ஒரே குடும்பத்தில் சமணம் ஆசீவகம் புத்தம் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுவார்கல். இதைச் சிலப்பதிகாரம் போன்றவற்றில் காணலாம். கோவலன் கண்ணகிக்குத் திருமணம் மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிட நடத்திய பெற்றோர்களில் சிலர் கோவலன் இறந்ததும் வருந்திச் சமண மடத்தில் சேர்ந்தது தெரிந்ததே.
எனவே நாம் மதம் என்ற சொல் கேட்டவுடன் இன்றுபோல் நினைக்கக்கூடாது.
தமிழரில் பலர் எப்படியோ தாங்கள் சைவர் என்ற எண்ணம் கடந்த சில நூறாண்டுகள் பரவியதால் இந்த எண்ணம் நேர்ந்திருக்கலாம். சைவத்தீவிரவாதிகள் சிலப்பதிகாரத்தை அழிக்க முயன்றது தெரிந்ததே. சித்தமரபு நூல்களை அழிக்க முயன்றதும் தெரிந்ததே.
இன்றும் கூடச் சிவத்தீட்சை பெற்றவர் சிலர் சிலப்பதிகாரம் திருக்குறள் எல்லாம் புறக்கணிப்பதைக்காணலாம்; அவர்கள் தமது சைவமரபைத் தொன்றுதொட்டு வேதிய மரபோடு சேர்ந்ததாக நினைப்பதுண்டு. ஆனால் இருக்குவேதம் இலிங்கத்துக்கு எதிரானது என்பதை இவரே அறியார்.
சிவன்கோயிலில் பூசாரிகளாக இருக்கும் வேதியமதத்தாரும் இதை மறந்தனர்.
அது நிற்க.
வள்ளுவரும் இளங்கோவும் சமணராக இருந்தும் கொல்லாமை புலால்மறுத்தலை மட்டுமே வற்புறுத்தித் தமிழ்ப்பண்பாட்டின் முழுக்கருவை மீறாமல் இலக்கியம் பாடியுள்ளனர்.
இளங்கோ ஒருபடிமேலே மிஞ்சித் தம்சமயத்தை முதலில் வற்புறுத்துவதுபோல் பாடிப் பின்னர் அதை மறுப்பதைக் கவுந்தியடிகள் வாயாகக் காணலாம்; சாரணர்கள் முன்னிலையில் அருகன் அல்லது வேறு யாருக்கும் ஐம்புலன்கள் பணிவோடு இணங்கா என்று பேசுவதையும் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப்படுத்தும்பொழுதும் பேசுவதையும் ஒப்பிட்டு வேறுபாட்டைக் காண்க; “இத்தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம்…”
அதுவும் நிற்க.
திருக்குறள் கடவுள்வாழ்த்தில் சொல்லும் கடவுட்குணங்களையும் கொல்லாமை புலால் மறுத்தல் ஆகியவற்றையும் பெரிய சான்றுகளாக வள்ளுவரின் சமண மரபிற்குக்கொள்வர். அதுபற்றிய மறுப்பை அறிந்தவர்கள் இங்கே தெரிவிப்பது பயனுள்ளதாகும்.
மற்றபடி வள்ளுவர் சமணக்கொள்கையைப் புகுத்த முயலவில்லை. தமிழரின் அடிப்படை மதமான அகப்பொருள் மீறாமல் காமத்துப்பாலைப் பாடியிருப்பது மிகச்சிற்பபு. மற்றும் மனிதனின் இரந்தே வாழவேண்டும் என்று மானத்தை மிஞ்சிய கடவுள் பரந்து கெடுக என்பதுவும் வாழ்வாங்கு வாழ்பவனே கடவுள் என்ற மதத்தையும் அவர் தெளிவாக ஓதுவதை மறக்கக்கூடாது,
திருக்குறளின் கொல்லாமையும் புலால்மறுப்புக் கொள்கையும் அது இயற்றிய காலக்கட்டத்திற்கு இருந்த தமிழர் மற்றும் இந்தியப்பொழிலில் வடபாலில் பரவியிருந்த ஆரியவேதியரின் மதம் ஆகியவற்றின் கொள்கைக்கு வேறுபட்டது. உயிர்ப்பலியையே அடிப்படையாகக் கொண்ட ஆரியவேள்விச் சமயம் (யாகம்) தமிழகத்திலும் அப்பொழுது பரவத் தலைப்பட்டதும் சங்கப்பாடல்களில் தெளிவு (அகநானூற்றில் ஆமையைத் தீயில் இடும் ஆரியவேள்விச் சடங்கு நேர்ச்சான்று).
திருமுருகாற்றுப்படையில் முருகனுக்கு ஆட்டுமறியை அறுத்துப் பலிகொடுக்கும் சடங்கு தெளிவாகப் பாடியுள்ளது.
“சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்” (திருமுருகாற்றுப்படை)
இங்கே அப்படிக்கொண்டாடும் விழாவைச் சீர்கெழு விழவு அதாவது பெருமைவாய்ந்த விழா என்று கூறுவதைக் கவனிக்கவும்.
இன்னும் மேலே அதே படலத்தில் நக்கீரர்
“மதவலிநிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி”
என்றும் பாடுகிறது.
[மிகுந்த வலிமை பெற்ற பருத்த காலடியை உடைய கொழுத்த விடையின் குருதியொடு விரவிய தூய வெள்ளரிசி]
பழைய உரைகாரர்களில் விடை என்பதற்குக் கிடாய் என்று நச்சினார்க்கினியரும், செம்மறிக்கிடாய் என்றும கவிப்பெருமாளும், ஆடு என்று பரிதி யென்பாரும் சொல்லுவர்’; ஆனால் பரிமேலழகர் யானைத்திரள் என்று பொருளுரைக்கின்றார்!
முன்பே சொல்லியதுபோல் ஆரியரின் வேள்விமதமும் எக்கச்செக்கமாக விலங்குகளைப் பலிகொடுப்படுப்பதையே சடங்காகக் கொண்டது. இதைச் சதபதப்பிராமணம் போன்ற வேள்விசடங்குமுறை நூல்களால் அறியலாம். பிராமணர்கள் பசுக்கறியை உண்பதைச் சிறந்த மரபாகக் கொண்டிருந்தது பலருக்கும் தெரியாது. இதை The Myth of the Holy Cow என்ற நூலில் இருந்து நுணுக்கமாகவும் விரிவாகவும் அறிந்துகொள்ளலாம்.
எனவே சமணர்கள் ஒருவர்தாம் கொல்லாமை புலால் உண்ணாமை ஆகியகோட்பாடுகளை அந்தக் காலகட்டத்தில் மேற்கொண்டிருந்தனர் என்பதைத் தெளியலாம். ஆகவே வள்ளுவர் சமணக்கொள்கையைக் கடைப்பிடித்தவராக இருக்கவே வாய்ப்புகள் உண்டு. அதில் யாரும் வருந்தவோ வெறுக்கவோ சான்றுகள் இல்லாமல் உணர்ச்சி அடிப்படையில் மறுக்கவோ தகாது.